ஜ.நா. மனித உரிமைப் பேரவையை ஈழத்தமிழர்கள் வினைத்திறனுடன் கையாண்டுள்ளார்களா! -ஐ.வி.மகாசேனன்-
.jpg)
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச களத்திற்கு நகர்த்தப்பட்ட ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிரதான வகிபாகத்தை பெறுகின்றது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகள் ஈழத் தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கான நீதிக் கோரிக்கை ஐ.நா. மனித உரிமை பேரவையின் அரங்கிலேயே உயிர்ப்புடன் பேணப்பட்டு வருகின்றது. நீதிப் பொறிமுறை என்பது அதிகார போட்டியினுள் அரசியல் பலத்துடன் இணைக்கப்பட்டதொன்றாகும். அரசியல் பலத்தை சரியாக பயன்படுத்தாத போது நிதிப் போராட்டத்தின் சாதகமான பக்கங்களை அடைய முடியாது என்பதுவே எதார்த்தமானதாகும். ஐ.நா. மனித உரிமை பேரவையின் களத்தில் ஈழத் தமிழர்களின் நீதிக் கோரிக்கையின் ஏற்ற-இறக்கங்கள் மைய அரசுகளின் நலன்களுக்கு உட்பட்டதாகவே நகர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஈழத்தமிழர்கள் மைய அரசுகளுடன் எத்தகைய அரசியல் ஊடாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும் தேடலுக்குரியதாகும். இக்கட்டுரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு காணப்படும் வாய்ப்புக்களை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டு...