உலகளாவிய நெருக்கடியிலிருந்து இலங்கையை பாதுகாக்க ஜே.வி.பியின் நாயக விம்ப பிரச்சாரம் போதுமானதா? -ஐ.வி.மகாசேனன்-
மேற்காசிய போரின் செய்திகள், மார்ச் முதல் வாரங்களில் இருந்த பரபரப்பினை, மார்ச் இறுதி வாரங்களில் பொதுவெளியில் அவதானிக்க முடியவில்லை. அதன் பொருள் மேற்காசிய போர் நெருக்கடி குறைவடைந்தது என்பதற்கு மாறாக, மக்கள் அதன் விளைவுகளோடு வாழப்பழக ஆரம்பித்துள்ளார்கள் என்பதே நிதர்சனமாகும். ஆயினும் நெருக்கடியின் வீச்சுகள் உயர்வடைந்து கொண்டே செல்கின்றன. அண்மையில் பொதுவெளி உரையாடல் ஒன்றில் முச்சக்கர வண்டி ஓட்டுநர், ‘எரிபொருள் விலையேற்றத்துக்கு சமாந்தரமாக பயணக்கூலியை வாகன முற்பதிவு செயலிகளில் பெற முடியாமையால், கட்டிட கூலி வேலைக்கு செல்லப் போவதாக’ ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை போர் நீடிப்பு எரிபொருள் விலையேற்றம் ரூபா 800/= வரை செல்லக்கூடிய அபாய எச்சரிக்கையையும் அப்பொதுவெளி உரையாடலில் கேட்கக்கூடியதாக இருந்தது. இந்த எரிபொருள் விலையேற்றம் பற்றிய எச்சரிக்கைகள் தொடர் விளைவுகள் சார்ந்து நீளக்கூடியதாகும். இக்கட்டுரை கடந்த வாரத்தின் நீட்சியாகவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளலை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் பற்றிய செய்தி தேடலில், மின்சார விரயத்தை கட்டுப்படுத்துவதற்கான அறிவி...