சுவிற்சர்லாந்து ஒருங்கிணைப்பு முயற்சியும் தமிழ்த் தேசியப் பேரவையின் கலந்துரையாடலும்! -ஐ.வி.மகாசேனன்-
பல்லின சமூக கட்டமைப்பில் அரசு மீது நம்பிக்கை அற்ற தேசிய இனங்கள், தமது உரிமைகளை பாதுகாத்திட சர்வதேச அரசுகளின் தலையீட்டை மற்றும் ஆதரவை கோருகின்றன. இலங்கையில் ஈழத் தமிழர்கள் நியாயமான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளவும் பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதும் அவசியமானது. எந்த ஒரு அரசும் தமது தேசிய நலனுக்குள்ளேயே இயங்கும் என்பதே எதார்த்தமான நடைமுறையாகும். இங்கு தார்மீக ஒழுக்கங்கள் கற்பனாவாதங்களாகும். இக்கற்பனாவாதங்களை களைந்து, எதார்த்த நடைமுறைகளை புரிந்து கொண்டே ஈழத்தமிழ் அரசியல் நகர்த்தப்பட வேண்டும். இலங்கையின் புவிசார் அரசியல் அமைவிடமும் அதுசார்ந்த ஈழத்தமிழர்களின் அரசியல் முக்கியத்துவம் சர்வதேச அரசுகளின் கவனத்தை குவிக்கின்றன. இதனால் பிராந்திய, சர்வதேச அரசுகள் ஈழத்தமிழர் அரசியலை தமது நலனுக்குள் வளைத்துக் கொள்ள முயல்வதும் இயல்பான நடைமுறை அரசியலாக அமைகின்றது. இவற்றை அடையாளம் காண்பதும், இவற்றிற்கு மாற்றீடாக பிராந்திய-சர்வதேச அரசுகளின் நலன்களுக்குள் ஈழத்தமிழர்களின் நன்களை ஒருங்கிணைப்பது அவசியமாகின்றது. இக்கட்டுரை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் அதிக ஈடுபா...