ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளும் தென்னிலங்கையின் நட்பு சக்திகளின் ஆதரவும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அதன் வழி தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது நீண்ட விவாதங்களையும் ஆழமான உள்ளடக்கங்களையும் கொண்டதாகும். இந்தப் பின்னணியிலேயே இப்பத்தி தொடர்ச்சியாக அரசியலமைப்பு உருவாக்கத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பான வாய்ப்புகள் மற்றும் குறைபாடுகள் சார்ந்து சில கவனங்களை உள்வாங்கி வருகின்றது. தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வில் உள்ளகப் பொறிமுறை பற்றிய விவாதங்களில், ஈழத்தமிழர்கள் தென்னிலங்கை நட்பு சக்திகளை உருவாக்குவதும் ஒருங்கிணைந்து பயணிப்பதும் தொடர்ச்சியான பரிந்துரையாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் குறிப்பாக 2009ஆம்ஆண்டு ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னரான தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கிய தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையிலும் தென்னிலங்கையுடன் ஒருங்கிணைந்து பயணிப்பது பிரதானமாக காணப்பட்டது. மறைந்த இரா.சம்பந்தன் சிங்கக்கொடியை தூக்கியது தொடக்கம் சம்பந்தன்-சுமந்திரன் இலங்கை சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டமை முதலான பல நிகழ்வுகள் அதனை உறுதி செய்யக்கூடியதாக அமைகின்றது. இது தென்னிலங்கை நட்பு சக்திகளை ஒருங்கிணைக்கும் வழி...