ஈழத்தமிழ் அரசியலில் Gen-Z சமுகத்தின் மெத்தனமும் முன்னைய தலைமுறையினரின் பொறுப்பின்மையும்! -ஐ.வி.மகாசேனன்-
இளையோர் அரசியல் சர்வதேச அரசியல் பரப்பில் பேசு பொருளாகியுள்ளது. இணைய யுகத்தில் பிறந்து வளர்ந்துள்ள இன்றைய இளைய தலைமுறையாகிய Gen-Z பருவத்தினரின் இணையத்தள பயன்பாட்டின் ஊடான சமூகப் போராட்டங்களும், அரசியல் மாற்றங்களும் சர்வதேச அரசியல் கவனத்தை குவித்துள்ளது. அதன் அடிப்படையாக இலங்கையின் 2022ஆம் ஆண்டு அரகலயவே சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும் ஈழத்தமிழ் அரசியல் பரப்பில், குறிப்பாக இனப்படுகொலைக்கு எதிராக நீதியைக் கோரும் ஒரு சமூகத்தின் இளையோரின் அரசியல் விழிப்புணர்வும் செயற்பாடும் பொருத்தமான வழித்தடத்தை கொண்டுள்ளதாக என்பதில் வலுவான சந்தேகங்களே காணப்படுகிறது. 2024-2025ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகளில் நகர்த்தப்படும் ஈழத்தமிழ் அரசியலும், இளையோரின் அரசியல் நடத்தைகளும் விருப்புக்களும் எதிரான விமர்சனத்தை உருவாக்கி வருகின்றது. தமிழ் அரசியல் கலாச்சாரம் மரபுகளை கடந்து செல்ல வேண்டும். நடைமுறையில் மரபுகளை கடந்து செல்லல் வளர்ச்சியை நிராகரித்து, எதிரான போக்கில் காணப்படுவதாக பொது விசனம் எழுந்துள்ளது. இக்கட்டுரை ஈழத்தமிழரசியலில் இளையோரின் வழித்தடத்தை அடையாளம் காட்ட முயல்வதாகவே அமைகிறது. ஈழத்தம...