திருகோணமலை புத்தர் சிலை விவகாரமும் அரசியலமைப்பின் பௌத்த சாசனத்திற்கான முன்னுரிமையும்! தமிழரசுக்கட்சி பொறுப்புக்கூற வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் அதிவிரைவாக இனவிகிதாசார மாற்றம் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில், மீண்டுமொரு இனரீதியான முரண்பாட்டின் வடு கடந்த வாரம் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சட்டமீறலான மற்றும் ஆக்கிரமிப்பு தொனியில் புத்த சிலைகள் நிறுவுவது இயல்பானதொரு நிலைமைகளாகும். 2005ஆம் ஆண்டு திருகோணமலை நகரின் மத்தியில் திடிரென அமைக்கப்பட்ட சட்டத்துக்கு புறம்பான புத்தர் சிலை விவகாரம் தமிழர் மத்தியில் கொதிநிலையை உருவாக்கியது. இக்கொதிநிலை இருபதுக்கும் மேற்பட்டோரை கொலை செய்ததுடன் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை இடம்பெயர செய்தது. எனினும் பேரினவாதத்தின் மூர்க்கத்தால் சட்டத்துக்கு புறம்பான புத்தர் சிலை நிலையானதுடன் தொடரானது. திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வென்னீர் ஊற்று வளாகம், அரிசி மலை, திருகோணமலை கோட்டை, குச்சவெளி, தென்னமரவாடி என சட்டத்துக்கு முரணாக புத்த சிலை நிறுவுவதும் ஆக்கிரமிப்பதும் தொடர் செய்திகளாகவே அமைந்துள்ளது. இலங்கையில் வடக்கு-கிழக்கில் சட்டத்துக்கு முரணான புத்தர் சிலை நிறுவலும், அரச எந்திரத்தின் பாதுகாப்புடன் நிலைபெறுவதும் இயல்பானதாகவே அமைகின்றது. ஆட்சியாளர்களின் மாற்றங்கள...