புதிய அரசியலமைப்பு விவாதமும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு முயற்சிகளும்! -ஐ.வி.மகாசேனன்-

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னர் அரசியலமைப்பு மாற்றம் பற்றிய விவாதம் நிறுவன சீர்திருத்தமாக இலங்கை அரசியலில் தொடர்ச்சியான பிரச்சாரப் பொருளாக அமைகின்றது. 2010, 2015, 2019 மற்றும் 2024ஆம் ஆண்டு தேர்தல்களின் பிரச்சாரத்தில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளிடம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் முதன்மையானதாகவும் அமைந்தது. பல சந்தர்ப்பங்களில் புதிய அரசியலமைப்புக்கான மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றிருந்தது. இந்த பின்னணியிலேயே கடந்த 15 ஆண்டுகளில் 2010ஆம் ஆண்டு 18ஆம் திருத்தம் முதல் 2022ஆம் ஆண்டு 22ஆம் திருத்தம் வரையில் ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் முழுமையான அரசியலமைப்பு மாற்றம் சாத்தியப்பாடற்றதாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது தொடர்பில் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கியிருந்தது. ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு தமிழ் அரசியல் பரப்பில் கடுமையான விவாதப் பொருளை உருவாக்கியிருந்த...