தமிழ்த்தேசியப் பேரவையின் கூட்டாட்சி கோரிக்கையும் தமிழக கட்சிகளின் இனப்படுகொலை நீதி கோரிக்கையும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் இந்தியாவின் தாக்கம் நிலையானது. இந்தியா எதிர்ப்புவாதத்தை பிரதான கொள்கைகளில் ஒன்றாக கட்டமைத்து வளர்ச்சியடைந்த ஜே.வி.பியின் தலைவர் இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க அண்மையில் அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், 'இந்தியா இலங்கையின் மிக நெருக்கமான அண்டை நாடாகும். இது சுமார் 24 கி.மீ கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் எங்களுக்கு நாகரிக தொடர்பு உள்ளது. இலங்கையின் வாழ்க்கையின் எந்த அம்சமும் ஏதோ ஒரு வகையில் இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை என்பது அரிது' எனப் பதிலளித்துள்ளார். இதுவே எதார்த்தமானதாகும். இவ்எதார்த்தத்தை ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர் புரிந்து கொள்வதினை தவிர்த்து வருகின்றார்கள். தமது தொண்டர்களையும் அவ்வாறே பயிற்றும் வந்துள்ளார்கள். புரிந்து கொண்டதாய் காட்டிக்கொண்டவர்களும், இந்தியாவின் நலன்களுக்குள் சரணாகதி அரசியலையே மேற்கொண்டிருந்தார்கள். சமகாலத்தில் இந்நிலையில் அரிதான மாற்றத்தை அடையாளங் காணக்கூடியதாக உள்ளது. தமிழ்த்தேசியப் பேரவை இலங்கை அரசியலில் இந்தியாவின் வகிபாகத்தை ஏற்றுக்கொண்டு, அதேவேளை ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவிற்கான வழியை புரிந்து கொண்டு, ஈ...