மீள அச்சுறுத்தும் கோவிட்-19 தொற்று | நெருக்கடி வருமுன் விழித்திடுவோம்! -ஐ.வி.மகாசேனன்-

“அருமை உடலின் நலமெல்லாம்

அடையும் வழிகள் அறிவாயே!

வருமுன் நோயைக் காப்பாயே!

வையம் புகழ வாழ்வாயே!” 

-கவிமணி தேசிக விநாயகனார்- (மலரும் மாலையும்)


உலக ஒழுங்கின் மாறுதலின் எல்லையை நிர்ணயித்த காரணியில், 2020களில் முழு உலகையும் முடக்கிய கோவிட்-19 (Covid-19) பிரதான நிலையை பெறுகின்றது. 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு; பொருளாதாரத்தை மையப்பத்திய பலதுருவ போக்கு என பல உரையாடல்கள் சர்வதேச அரசியல் பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அளாவிய சூழலில், நிலையான மாற்றத்தை அடையாளப்படுத்தியதில் கோவிட்-19 நெருக்கடிக்கு பிரதான வகிபாகம் உள்ளது. 2020ஆம் ஆண்டு கோவிட்-19 ஏற்படுத்திய அரசியல் பொருளாதார நெருக்கடியிலிருந்தே இன்னும் பல அரசுகள் மீள முடியாத நிலையில் உள்ளன. இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியின் ஆதாரமாகவும்  கோவிட்-19 முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பிரதானமாகும். இந்நிலையில் மீள தென்கிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகளில் கோவிட் தொற்றின் அதிகரிப்பு பிரதான செய்தியாகி உள்ளது. இக்கட்டுரை கோவிட் தொற்றுக்கான முன்னாயர்த்த தேவையை இனங்காண்பதாக
உருவாக்கப்பட்டுள்ளது.

மே-5, 2023அன்று, உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19ஐ ஒரு உலகளாவிய சுகாதார அவசரநிலையிலிருந்து தளர்த்தியது. 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், உலகெங்கிலும் உள்ள நாடுகளை கொரோனா வைரஸின் சுகாதார மற்றும் பொருளாதார தாக்கங்கள் பாதிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொற்றுநோய் உலகளாவிய கொள்கை விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தியது. வைரஸ் பரவல் மற்றும் அதிக சுமை கொண்ட சுகாதார அமைப்புகள் குறித்த கவலைகள், பல அரசாங்கங்கள் வைரஸின் பரவலைக் குறைக்க கடுமையான கட்டுப்பாட்டு உத்திகளைக் கடைப்பிடிக்க வழிவகுத்தன. இதில் மக்கள் மற்றும் பொருட்களின் இயக்கத்தின் மீதான நேரடி கட்டுப்பாடுகள் மற்றும் சமூக விலகல் மற்றும் முகமூடி அணிதல் போன்ற நெறிமுறைகள் காணப்படுகின்றது. இதன் விளைவாக பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட மந்தநிலை, குறிப்பாக அத்தியாவசியமற்றதாகக் கருதப்படும் அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், போக்குவரத்து மற்றும் வர்த்தக உள்ளீடுகளை பெரிதும் நம்பியிருந்தவை, பெரும் துயரத்தை ஏற்படுத்தின. உலகம் முழுவதும், ஏழ்மையான மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்டவர்களில் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

உலகின் பெரும்பகுதியைப் பொறுத்தவரை, கோவிட்-19 தெற்காசியா முழுவதும் மறுக்க முடியாத மற்றும் நீண்டகால அழிவின் பாதையை விட்டுச் சென்றுள்ளது. ஒவ்வொரு நாடும் அதன் சொந்த எதிர்வினையைக் கொண்டிருந்தது. அதன் விளைவாக தொற்றுநோயுடன் அதன் சொந்த அனுபவத்தை பகிர்கிறது. துரதிஷ;டவசமாக, மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே போராடி வருபவர்களாகவே உள்ளனர். மேலும் ஆச்சரியப்படத்தக்க வகையில், வீட்டு வன்முறை மற்றும் புலம்பெயர்ந்தோர் நெருக்கடி போன்ற பிரச்சினைகள் தொற்றுநோயால் மோசமாகின. தெற்காசியப் பொருளாதாரங்களில் கோவிட்-19 தனித்துவமான சவால்களை ஏற்படுத்தியிருந்தது. தெற்காசியா பல்வேறு அளவிலான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி மற்றும் மாறுபட்ட அளவிலான அரசு திறன் கொண்ட பெரிய மற்றும் சிறிய பொருளாதாரங்களை உள்ளடக்கியது. சமீபத்திய தசாப்தங்களில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றாக உருவெடுத்த போதிலும், இந்தப் பகுதி பசி, ஊட்டச்சத்து மற்றும் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் போன்ற சவால்களையும் எதிர்கொள்கிறது. பிராந்தியத்தின் அதிக மக்கள் தொகை மற்றும் அதிக வறுமை விகிதங்கள், மோசமான சுகாதார உள்கட்டமைப்புகள், மோசமான சமூக-பொருளாதார நிலைமைகள், போதுமான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள், தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் போதுமான வாழ்க்கை இட ஏற்பாடுகள் இல்லை. தெற்காசியா உலகின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றாகும். உலகின் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு பேர் இந்தப் பகுதியில் வாழ்கின்றனர். சுமார் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் மற்றும் முதன்மையாக விவசாயத்தை நம்பியுள்ளனர். கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு, தெற்காசியாவில் 649 மில்லியன் மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையுடன் இருந்தனர். மேலும் 271 மில்லியன் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையுடன் இருந்தனர். இதேபோல், 36 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 16 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாகவும் இருந்தனர். கோவிட்-19 இன் தாக்கத்தால் நிலைமையை மேலும் மோசமடைய செய்திருந்தது.

2020ஆம் ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட அழிவு, முன்அனுபவமின்மையும் அது தொடர்பான விழிப்புனர்வின்மையுமே காரணமாகும். மேலும் கோவிட்-19 நெருக்கடி பற்றிய சர்ச்சை மருந்து மாபியாவால் உருவாக்கப்பட்டது என்ற விமர்சனங்களும் பொதுவெளியில் காணப்படுகின்றது. அத்தகையதொரு முன்அனுபவமற்ற சூழல் தற்போது காணப்படவில்லை. எனினும் மக்கள் கொரோனாவோடு சேர்ந்து வாழும் மன நிலைக்குள் காணப்படுகின்றார்கள். இப்பின்னணியிலேயே தற்போது அதிகரித்து வரும் கோவிட்-19 பற்றிய செய்திகளும் அவதானிக்கப்படுகிறது. சேர்ந்து வாழல் என்ற அடிப்படையில் விழிப்பின்றி இருத்தல் ஆபத்தான விளைவுகளையும் உருவாக்கக்கூடியதாகும். ஜூன் 8, 2025அன்று இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 48 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும், இந்தியாவில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை 6,000 ஐத் தாண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலும் மட்டுப்பட்ட எண்ணிக்கையிலான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், ஆபத்தான கட்டத்தில்  இல்லை என்றவாறே சுகாதார அமைச்சகத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் டாக்டர் ரஞ்சித் படுவான்துடாவ, பரவிய சமீபத்திய கோவிட்-19 வகை மிகவும் கடுமையானது அல்ல என்றும், உலகெங்கிலும் உள்ள நாடுகள் தடுப்பூசியில் அதிக கவனம் செலுத்தியதால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் கூறினார். சுகாதார அமைச்சகம் முகக்கவசங்களை கட்டாயமாக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, ‘பதிவான வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அடுத்த நடவடிக்கையை அமைச்சகம் எடுக்கும்’ என்று தெரிவித்தார். மேலும், "மருத்துவமனைகளில் PCR பரிசோதனையை அதிகரித்துள்ளோம். பொறுப்பற்ற முறையில் முடிவுகளை எடுக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த காலங்களில் இலங்கையில் கோவிட்-19 இரண்டாம் அலைக் காலப்பகுதியிலும் அன்றைய அரசாங்கம், கோவிட்-19 அதிகரிப்பு தொடர்பான செய்திகளை மட்டுப்படுத்துவதிலேயே உயர் கவனத்தை செலுத்தினார்கள். மாறாக மக்களை எச்சரிக்கை செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் போதிய கவனத்தை செலுத்தியிருக்கவில்லை. எனினும் சமூக மட்டத்தில் அதன் தாக்கமும் இழப்பும் அதிகரிக்கப்பட்ட பின்னர், பௌத்த மகா சங்கத்தின் தலையீட்டின் பின்னரே பொது முடக்கம் மற்றும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. கோவிட்-19 தொற்று மற்றும் அதன் விளைவுகள் தொடர்பில் இலங்கை மக்களிடையே போதிய முன்அனுபவங்கள் காணப்படுகிறது. எனவே உண்மைத் தன்மையை செய்தியாக்குவதன் மூலம் மக்களை சுய விழிப்புடன் பாதுகாப்பாய் வாழ வழிப்படுத்த முடியும். கோவிட்-19 பற்றிய செய்திகள் மக்களை பயமுறுத்துவதற்கானதல்ல. மாறாக மக்களை எச்சரிக்கை செய்து விழிப்பூட்டுவதாக அமைதல் வேண்டும். அதுவே அவசியமானதாகும். செய்திகளை முடக்கி மக்களை விழிப்பூட்ட தவறுவதால், சமூக அனர்த்தமாகிய பின்னரே மக்கள் சுயமாக அறியக்கூடியதாக அமையும். எனினும் அது காலந்தாழ்த்தியதாகவும். இழப்பை அதிகரிக்கக்கூடியதாகவுமே அமையக்கூடியதாகும்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, கோவிட்-19 தொற்றை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் செயல்பாட்டில் உலகளாவிய அதிகரிப்பு பிப்ரவரி 2025 முதல் பதிவாகியுள்ளது. சர்வதேச சுவாச கண்காணிப்பு அமைப்பின் அடிப்படையில், ஆசியாவின் பல நாடுகளில் சமீபத்திய மாதங்களில் கோவிட்-19 வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஹாங்காங்கில் கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு கோவிட்-19 தொற்று விகிதம் அதிகமாக உள்ளது. சுகாதாரப் பாதுகாப்பு மையத்தின் தொற்று நோய்ப் பிரிவின் தலைவர் ஆல்பர்ட் அவ் கூறுகையில், “சுவாச மாதிரிகளில் நேர்மறை தொற்றுகளின் சதவீதம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மே-3 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், நகரில் 31 கடுமையான கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 12 மாதங்களில் ஒரே வாரத்தில் அதிகபட்சமாகும்” எனத்தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் மே-3 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் கோவிட்-19 வழக்குகளில் 28% அதிகரிப்பு இருப்பதாகவும், 14,200 புதிய தொற்றுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் கோவிட் தொடர்பான மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களும் சுமார் 30% அதிகரித்துள்ளனர். சமகாலப்பகுதியில் இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் 93 கோவிட்-19 நோயாளிகள் மட்டுமே இருந்தனர். நாட்டில் புதிய அலைக்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும் ஒரு மாத கால இடைவெளியில் 6000இற்கும் அதிகமான தொற்றாளர்கள் அதிகரித்ததுடன் மரணங்களும் பதிவாகியுள்ளது. பிராந்தியத்தில் கணிசமாக அதிகரித்துவரும் கோவிட்-19 தொற்று பற்றிய செய்திகள் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய செய்தியையே உணர்த்துகிறது.

இலங்கை, தீவு என்ற அடிப்படையில் பிராந்தியத்தில் ஏற்படும் நெருக்கடிகளின் தாக்கங்கள் கடல் தாண்டி வருபவையாகவே அமைகின்றது. இதுவொரு வகையில் இலங்கைக்கு பாதுகாப்பான புவியியல் கட்டமைப்பாகும்.எனினும் இலங்கையின் வருமானம் சுற்றுலாத்துறையிலேயே தங்கியுள்ளது. ஆதலால் வெளிநாட்டவர்களையும் அவர்களுடன் இணைந்தவற்றையும் தங்கு தடையின்றி வரவேற்பதாகவே அமைகிறது. கோவிட் தொற்று அதிகரிப்பு பற்றி இலங்கை சுகாதார அமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், “விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற நாட்டிற்குள் நுழையும் இடங்களில் பயணிகளைத் திரையிட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தேவைப்பட்டால் அந்த முடிவை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும்” கூறினார். எனவே இதுவரை பயணிகளிடம் கோவிட் தொற்றை பரிசோதிப்பதற்கான எந்த அணுகுமுறையும் பின்பற்றப்படவில்லை என்பதையே உறுதி செய்கிறது. இது பிராந்தியத்திலிருந்து இலங்கைத்தீவை வேறுபடுத்தும் அணுகுமுறையை இலங்கை அரசாங்கம் பின்பற்றவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. பிராந்தியத்தின் தாக்கம் என்பது நிலைமைகள் விரைவாக மாற்றக்கூடும் என்பதையும், மெத்தனப் போக்கு மக்களைப் பாதிக்கக்கூடியதாக மாற்றக்கூடும் என்பதையுமே  இந்தியாவின் கோவிட் தொற்று செய்திகள் நினைவூட்டுகிறது.

எனவே, கோவிட் தொற்று பற்றிய இலங்கை தரவுகளை சீராக அறிய முடியாதுள்ள போதிலும், பிராந்திய செய்திகள் கோவிட்-19 இன்னும் முடிந்துவிடவில்லை என்ற தெளிவான அறிகுறியை வழங்குகிறது. 2020ஆம் ஆண்டிலிருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டாலும், மக்கள் தங்கள் பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும்போது, வைரஸுக்கு அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து சுகாதார அமைப்புகளை சீர்குலைக்கும் சக்தி உள்ளது. எனவே, மக்கள் தமது சுகாதாரத்தில் விழிப்புடன் இருப்பது ஆரோக்கியமானதாகும். யாராவது சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவித்தால், மருத்துவ உதவியை நாட வேண்டும். அதேவேளை கோவிட் தொற்று போன்ற சுவாச வைரஸ் தொற்றுகள் பரவுவதைத் தடுக்க நல்ல சுவாச நெறிமுறைகள் மற்றும் பொது சுகாதார நடைமுறைகளைப் பராமரிப்பது முக்கியம். இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை ஒரு திசு காகிதம் அல்லது முழங்கையால் மூடுதல், முகத்துடன் தேவையற்ற தொடர்பைத் தவிர்ப்பது, சரியான கை கழுவுதல் அல்லது கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துவதன் மூலம் அடிக்கடி கை சுகாதாரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் மக்கள் சுயவிழிப்புடன் இருத்தல் வேண்டும். அசுத்தமான கைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. சுவாச நோயின் அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க முகமூடியை அணிய வேண்டும் மற்றும் அத்தியாவசியமானவை தவிர, நெரிசலான பொது இடங்களைத் தவிர்ப்பதும் ஆரோக்கியமானதாகும். கோவிட் அதிகரிப்பது மக்களின் ஆரோக்கியமற்ற செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது. மக்கள் சுய சுகாதாரத்தை பேணுவதால் பொது சுகாதாரமும் பாதுகாக்கப்பட கூடியதாக அமையும். அரசாங்கங்களின் தவறான கொள்கைகளை சுட்டி காட்டி இழந்தவற்றை மீளப்பெற்றுவிட முடியாது. இயன்றளவு மக்கள் தம்மையும் தமது சமூகத்தையும் பாதுகாப்பதே உசிதமானதாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-